தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவராக ஜொலித்து வருகின்றார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து தமிழ் திரைப்பட ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும், தளபதி விஜய்யுடன் இவர் நடித்து மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படம், விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரத்தினை பெரிதளவில் பேசப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் தொடர்ந்து வெளியாகவுள்ளன.
எது எப்படி இருந்தாலும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் படக்குழுவில் உள்ள சிலருக்கும் அங்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது. பின்பு அந்த வாக்குவாதம் பெரிய தகராறாக மாறியுள்ளது. இதனால் படப்பிடிப்பு சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சக பத்திரிகையாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் நடிகர் விஜய்சேதுபதி அங்கு சென்று இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் அதனைத் தடுத்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார் .
அதன் பின்னர் காவல்துறையினரின் கவனத்துக்கு இந்த பிரச்சனை சென்றதை அடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.