கோடைக்காலத்தில் வெப்ப தாக்கத்தை சமாளிப்பதற்கு வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் பருக வேண்டி ஏற்படும். மழைக்காலம் தொடங்கியதும் பருகும் தண்ணீரின் அளவு நம்மில் பலருக்கு படிப்படியாக குறையத் தொடங்கும்.
எனினும் உடலில் நீர்ச்சத்து அளவை சீராக பராமரிக்க எல்லா பருவ காலநிலையிலும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது.
தண்ணீர் பருகும் அளவையோ, திரவ உணவுகளை உட்கொள்வதையோ குறைத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிலருக்கு உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறும். அப்படி வியர்ப்பவர்களுக்குத் தான் உடல் வறட்சி அதிகமாக ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஒருவருக்கு திடீரென்று உடலில் வறட்சி ஏற்பட்டால் அவரது உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம். உடல் வறட்சி காரணமாக சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படும்.
நீர்ச்சத்து குறைவாக இருந்தால் வாயில் போதுமான அளவு உமிழ் நீர் சுரக்காது. அப்படி உமிழ் நீர் அளவு குறைந்து போனால் வாயில் பக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். அதனால் வாய் துர்நாற்றம் ஏற்படக்கூடும்.
தொடர்ந்து உடல் வறட்சி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் உடல் வெப்பம் அடைந்து காய்ச்சல் ஏற்படுவது அல்லது உடல் குளிர்ச்சி தன்மை அடைவது போன்ற சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அத்துடன் உடலில் நீர்ச்சத்து குறையும்போது மூளையின் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி, அடிக்கடி தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
எனவே தினமும் ஆண்கள் 4 லீட்டர் திரவ உணவுகளையும், பெண்கள் 3 லீட்டர் திரவ உணவுகளையும் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மது, உடலுக்கு சக்தி தரும் நச்த்தன்மை நிறைந்த குளிர்பானங்கள் உடல் வறட்சியை உண்டாக்கும் என கூறப்படுகின்றது.
அதனால் நீர்ச்சத்து அளவை பராமரிக்க உதவும் இயற்கையான திரவ பானங்களை தேர்ந்தெடுத்து பருக வேண்டும்.
அத்துடன் நாளாந்தம் நிறைவாக தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் வறட்சியில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.