தேவையான பொருட்கள்
சவ்வரிசி – 1 கப்.
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் 1 கப் அளவு சவ்வரிசியை இரண்டிலிருந்து, மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின், சவ்வரிசியை அளந்த அந்த கப்பிலேயே, பாதி அளவு தண்ணீர் எடுத்து சவ்வரிசியில் ஊற்றி, குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதாவது 1 கப் அளவு சவ்வரிசி, 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி முதலில் ஊறவைத்து விடுங்கள்.
சவ்வரிசி 6 மணிநேரம் ஊறிய பின்பு, கையில் எடுத்தால் நசுக்கும் அளவிற்கு மாறிவிடும். அடுத்ததாக சவ்வரிசி அளந்த அதே கப்பில் 6 கப் அளவு தண்ணீரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். கொதித்துக் கொண்டிருக்கும் இந்த தண்ணீரை, எடுத்து 6 மணி நேரம் ஊற வைத்த சவ்வரிசியில் ஊற்றிவிட வேண்டும்.
முதலில் சவ்வரிசியை 1/2 கப் தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து இருக்கின்றோம். 6 மணி நேரம் கழித்து, அதே சவ்வரிசியில் சுடுகின்ற தண்ணீரையும் ஊற்றி 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். மொத்தமாக 14 மணி நேரம் சவ்வரிசியை ஊற வைக்க வேண்டும்.
14 மணி நேரம் கழித்து ஊறியிருக்கும் சவ்வரிசியை எடுத்து,
மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மொழுமொழுவென்று அரைத்துக்கொள்ள வேண்டும். சவ்வரிசியில் ஊற வைப்பதற்காக ஊற்றி இருக்கும் தண்ணீரே போதும். அதிகப்படியான தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம் (உங்களது மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால், சவ்வரிசியை அளந்த அதே கப்பில், 1 கப் அளவு தண்ணீரை மட்டும் எடுத்து தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.) இப்போது சவ்வரிசி கஞ்சி மாவு தயாராக இருக்கிறது. இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களுக்கு மிளகாய்த்தூள் வேண்டுமென்றால் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம். பச்சை மிளகாய் வாசம் வேண்டும் என்றாலும் அதை அரைத்து போட்டுக் கொள்ளலாம். சீரகத்தூள் வேண்டும் என்றாலும் அதை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது ஒரு மேசை மீது நல்ல துணியொன்றை விரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் சவ்வரிசி கஞ்சி மாவை, சிறிய குழி கரண்டியில் அள்ளி சிறிய சிறிய வத்தலாக இட்டுக் கொள்ளுங்கள். மெல்லிசாக இட வேண்டாம். கொஞ்சம் தடிமனாக இருக்கட்டும்.
காய்ந்தபின் சரியான பதத்திற்கு வந்துவிடும். இரண்டு நாட்கள் வரை காய வைத்தால் மட்டுமே போதும். ஒருபக்கம் காய்ந்த பின், அந்த வத்தலை எடுத்து, திருப்பிப்போட்டு பின்பக்கமும் நன்றாக
காய வைக்க வேண்டும். நன்றாக வெயில் இருக்கும் பட்சத்தில், வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளலாம்.
வத்தலை கைகளால் எடுத்து உடைத்து பார்த்தீர்கள் என்றால், உடையும் அளவிற்கு காய்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் வத்தல் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். அதன் பின்பு நீங்கள் இட்ட வத்தலை, எண்ணெயை நன்றாக சூடு படுத்தி பொரித்து பாருங்கள். வெள்ளை நிறத்தில் பெரியதாக வரும்