இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க.வைச் சேர்ந்த கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கெளதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. ‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து மின்னஞ்சல் மூலம் நேற்று கெளதம் கம்பீருக்கு இந்தக் கொலை மிரட்டல் வந்துள்ளது.
இந்த கொலை மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக கெளதம் கம்பீர் சார்பில் டெல்லி பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கம்பீர் இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற பெயரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில் ’ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற பெயரில் காஷ்மீரில் ஏதேனும் பயங்கரவாத அமைப்பு உருவெடுத்து வருகிறதா? என்பது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.