T20 தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது தன்னை யாரும் தொடர்புகொண்டு பேசவில்லை என விராட் கோலி கூறினார். ஆனால் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கோலியிடம் தலைவராக நீடிக்க வலியுறுத்தினோம் எனக்கூறி வருகின்றனர். இவர்களுடைய கருத்து குறித்து கோலி இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக ஜனவரி 11 ம் திகதிக்கு முன் விராட் கோலி பத்திரிகையாளர்களை சந்தித்து பதிலளிப்பார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது:-
விராட் கோலி தன்னை சுற்றி நடக்கும் சர்ச்சைகளுக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். அவர் ஜனவரி 11ம் திகதி கேப்டவுனில் நடைபெற இருக்கும் தனது 100 வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறார். போட்டிக்கு முன்னதாக நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் கோலி பதிலளிப்பார். இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்தார்.