இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் எஸ்பிபி கடந்த 2020ல் உடல்நலக் குறைவால் காலமானார்.
எஸ்பிபியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இசை ரசிகர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லோரையும் ரசிக்க வைக்கும் உருவம் இல்லா ஒரே ஜீவன் இசை மட்டுமே.ஜனனம் முதல் மரணம் வரை எப்படி ஒருவருடன் இசை பயணிக்கிறதோ,அப்படியே எஸ்பிபி இன் குரலும்.எஸ்பி பாலசுப்ரமணியம் என்ற இந்த பாடும் நிலாவின் குரலில்,மனிதனின் மனதுக்குள் புதைந்துக்கிடக்கும் சோகங்கள் எல்லாம் காற்றில் கரைந்துபோய்விடும்.
அப்பேற்பட்ட இந்த மந்திர குரலுக்குச் சொந்தக்காரர் எஸ்பிபி விண்ணுலகம் சென்று இரண்டாண்டுகள் ஓடிவிட்டன.பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம், தாய், தந்தை, நட்பு, காதல், ஏமாற்றம், தோல்வி, துரோகம், வலி, அழுகை, சிரிப்பு, திருமணம், பிரிவு இன்னும் இருக்கும் அத்தனை உறவுகளையும் உணர்வுகளையும் பாடல்களாக பாடித் தீர்த்துவிட்டு போய்விட்டார் இந்த பாடும் நிலா.அதனால் எஸ்பிபியின் மறைவை இன்னும் யாராலும் உணர முடியவில்லை.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என நடிகர்கள் வரிசையிலும் சரி, எம்ஸ்வி, இளையராஜா, ஏஆர் ரஹ்மான், யுவன், ஜிவி பிரகாஷ், அனிருத் என இசையமைப்பாளர்கள் வரிசையிலும் சரி, மூன்று தலைமுறைகளுக்கும் முத்து முத்தான பாடல்களைப் பாடி,இந்தச் சமூகத்தை துயரங்களில் இருந்து கரை சேர்த்தவர் எஸ்பிபி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொழிகளிலும் பல எல்லைகளைக் கடந்தவர் இவர்.
இசையின் மூலமும் பாடல்கள் வழியாகவும் ரசிகர்களுக்கு திகட்டாத தேன்மழை பொழிந்து
இந்த உலகைவிட்டு விண்ணுலகம் சென்ற எஸ்பிபியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தை,அவரின் பாடல்களை ஒலிக்கவிட்டு இதய அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இன்று இசை ரசிகர்கள்.