2022 ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண உதைப்பந்தாட்டத் தொடர் கட்டாரில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் அங்கு போட்டிகள் நடைபெறும் மைதானங்களை சூழவுள்ள பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (FIFA) தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை முதல் எதிர்வரும் டிசெம்பர் 18 ஆம் திகதி வரை உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கட்டாரில் நடைபெறுகின்றன.
போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் இரசிகர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதற்காக அனுசரணை நிறுவனமொன்றின் பல கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த திடீர் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விளையாட்டு மைதானங்களில் வி.ஐ.பி. பகுதிகள், டோஹாவிலுள்ள பிரதான FIFA இரசிகர் வலயம், சில தனியார் இரசிகர் வலயங்கள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெற்ற 35 ஹோட்டல்கள், விடுதிகளில் மதுபானம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.