ஏராளமான சத்துக்களைக் கொண்டுள்ள பாசிப்பயறு, எமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சரும அழகை மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவுகின்றது. எனவே பாசிப்பயறைக் கொண்டு எமது சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
பாசிப்பயறைத் தூளாக அரைத்து, அதனுடன் சிறிதளவு பன்னீரையையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது எமது முகத்தில் காணப்படும் சுருக்கங்களை நீக்கி, இளமையான சருமத்தைத் தருகின்றது.
பாசிப்பயறு மாவை உடல் முழுவதும் பூசி குளிப்பதால் சருமம் பொலிவாகக் காணப்படுவதுடன், சருமத்தில் காணப்படும் வறட்சி நீங்கி சருமம் மென்மையாக இருக்கும். அத்துடன் அதிக வெப்ப காலங்களில் இவ்வாறு பாசிப்பயறு மாவைப் பயன்படுத்தி குளிப்பதனால், சருமத்தில் காணப்படும் கருமை மறைந்து, சருமம் பிரகாசமாகக் காணப்படும்.
அரை தேக்கரண்டி பாசிப்பயறு மாவுடன், சிறிதளவு கற்றாழை ஜெல்லையும், தண்ணீரையும் கலந்து முகத்தில் பூசி நன்கு காய வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பின்னர், மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
ஒரு தேக்கரண்டி பாசிப்பயறு மாவுடன், சிறிதளவு தயிரையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் கழுவி வர, சருமம் வசீகரமாகக் காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகை பாதுகாத்துக் கொள்வோம்.