தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கி தற்போது சிறந்த நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது இசை மட்டுமல்ல இவருடைய திரைப்படங்களும் கூட வித்தியாசமாக காணப்படும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதித்தது. இதனைத்தொடர்ந்து இரசிகர்கள் 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் வருகிறார்.
மலேசியாவில் நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஆண்டனிக்கு விபத்து நேர்ந்தது.அதில் அவருக்கு தாடை மற்றும் மூக்கில் பயங்கர காயம் ஏற்பட்டது, இதனால் அவர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் நலம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது "மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.