தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான திறமையினாலும் வித்தியாசமான படைப்புக்களின் மூலமும் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்.
இவர் இயக்கத்தில் வெளியான 'ஒத்த செருப்பு' திரைப்படம் விருதுகளை வாங்கி குவித்தது. சமீபத்தில் இவர் இயக்கிய 'இரவின் நிழல்' திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
இதற்கிடையே சில தினங்கள் முன்பு சென்னை புத்தக கண்காட்சியில், சிறைவாசிகளுக்காக புத்தகங்களை மடிப்பிச்சை எடுத்தார் பார்த்திபன். அவரது இந்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக கூறி யூடியூபில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அது குறித்து விளக்கம் அளித்துள்ள பார்த்திபன், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை வெளியிட்டு, 'நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! நெகட்டிவிட்டியை பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்' என்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்