குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான கிரேவி மலாய் பன்னீர்.
இதை சப்பாத்தி, சோறு மற்றும் நாண் ரொட்டியுடன் சாப்பிடும் போது இன்னும் அற்புதமாக இருக்கும். இதில் கல்சியம் சத்து அதிகமாக இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
மலாய் பன்னீர் செய்வதற்கு தேவையான பொருட்கள் - பன்னீர் - 200 கிராம், வெங்காயம் -1, இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 தேக்கரண்டி, மிளகாய் தூள் -1 தேக்கரண்டி, சீரகம் -1 தேக்கரண்டி, மல்லித் தூள் -1 தேக்கரண்டி, சீரகப் பொடி -2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி, கரம் மசாலா -1 தேக்கரண்டி, முந்திரி - 3 தேக்கரண்டி, பாதாம் -3 தேக்கரண்டி, உலர்ந்த வெந்தய இலைகள் -1 தேக்கரண்டி, ப்ரெஷ் மில்க் கிரீம் - ½ கப், எண்ணெய் - 4 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, சர்க்கரை -1 தேக்கரண்டி
செய்முறை - முதலில் பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் அதன் பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் ஓரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு 15 நிமிடம் கழித்து, தண்ணீரை பிழிந்து தனி பாத்திரத்தில் பன்னீரை மாற்றவும்.
முந்திரி, பாதாமை நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பின்பு நன்றாக அரைத்து பேஸ்ட் போல் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பாத்திரம் சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை விலகும் வரை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, அரைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் அதில் தேவையான நீர் சேர்த்து பன்னீரை போட்டு மிதமான சூட்டில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். கடைசியில் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் ப்ரெஷ் மில்க் கிரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சூடான சுவையான மலாய் பன்னீர் தயார்.