தாய்வானை சேர்ந்த ஹூவாங் தனது வீட்டில் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த கிளி 40 சென்டி மீட்டர் உயரம், 60 சென்டி மீட்டர் இறக்கையுடன் பெரிய அளவில் வளர்ந்து பார்ப்பவர்களை கவர்ந்து வந்தது.
ஹூவாங் சம்பவத்தன்று அந்த கிளியை அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். குறித்த பூங்காவில் அப்பகுதியின் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர் லின் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஹவாங்கின் கிளியானது வைத்தியர் லின் மீது பறந்து சென்று அவரது முதுகில் அமர்ந்து இறக்கையை பலமுறை அசைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வைத்தியர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் வைத்தியரின் இடுப்பு எலும்பும் முறிந்து படுகாயமடைந்தார்.
இதனால் அவர் மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் காயம் முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆகியுள்ளது.
இந்த சம்பவத்தால் லின்னால் தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வருமான ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், உரிய நிவாரணம் கேட்டு தைனான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் தன்னால் தற்போது நடக்க முடிகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என வைத்தியர் லின்னின் வழக்கறிஞர் வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டொலர் (74 இலட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தைனான் மாவட்ட நீதிமன்றம் காணாத அறியதொரு வழக்கு இது என்று கூறப்படுகிறது.