இந்திய எல்லையில் இராணுவ செயல்பாடுகளை அதிகரித்தல் , ஹொங்கோங் மீதான நடவடிக்கைகள் என்று, தொடர்ந்து தனது ஆதிக்க செயல்பாடுகளை சீனா மேற்கொண்டுவருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சீனாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்ற போதிலும், சீனா தொடர்ந்தும் பல சாதனைகளை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா 2-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இராணுவத்துக்கு சுமார் ரூ.66 லட்சத்து 67 ஆயிரத்து 760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை எப்படியும் முந்திவிட வேண்டும் என்கிற முனைப்பில், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இராணுவத்துக்கான பட்ஜெட்டை சீனா அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு சீனா தனது இராணுவ பட்ஜெட்டை 7.1 சதவீதமாக உயர்த்தியது. அதன்படி இராணுவத்துக்கு 1.45 டிரில்லியன் யுவான் (சுமார் ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் கோடி) ஒதுக்கியது.
இந்த நிலையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் சீனா, இராணுவ பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு இராணுவத்துக்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் இராணுவத்துக்கு 1.55 டிரில்லியன் யுவான் (சுமார் ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி) ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீன இராணுவத்தின் தற்போதைய பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகமாகும்.
இராணுவ வீரர்களின் எண்ணிக்கையையும் சீனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சனத்தொகையை அதிகரிக்கும் வகையில், நாட்டு மக்களுக்கு பல சலுகைகளை வழங்கிவருகிறது.