உலகளவில் வைத்தியர்கள் மருத்துவ துறையில் நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். பொதுவாக பிறந்த குழந்தைக்கு சத்திரசிகிச்சை செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம்.
ஆனால் அமெரிக்க வைத்திய குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த கர்ப்பமான பெண் ஒருவரின் வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில், அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.
குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய வைத்தியர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். இந்த சோதனையில் மூளையில் இருந்து இதயத்துக்கு இரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரிய வந்தது.
இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும். இந்த குறைபாட்டினால் இரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். ரத்தம் நுண் குழாய்களுடன் நேரடியாக இணைவதற்கு பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணையும்.
இதன் காரணமாக நரம்புகளுக்குள் அதிக இரத்த அழுத்தத்தை உருவாக்கும். நரம்புகளில் இந்த கூடுதல் இரத்த அழுத்தம் ஏற்படும் போது பல பிரச்சினைகள் உருவாகும்.
மேலும் இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது. அரிய வகை நோயான இந்த குறைபாட்டை சிகிச்சை மூலம் சரிசெய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான வைத்திய குழுவினர் முடிவு செய்தனர்.
அந்த குழந்தையை கருவிலேயே காப்பாற்ற நடவடிக்கை எடுத்தனர். மிகவும் சவாலான இந்த மூளை அறுவை சிகிச்சையினை வைத்திய குழுவினர் ஒரு ஊசி மூலம் வெற்றிகரமாக நடத்தினார்கள்.
அதனை அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது அந்த குழந்தையின் இரத்த நாளம் சரி செய்யப்பட்டதால் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் முதல் முறையாக இந்த சத்திரசிகிச்சையை அமெரிக்க வைத்திய குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.