பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) இன்று கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதம், தேசத்துரோகம், மத நிந்தனை, ஊழல், பண மோசடி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை இராணுவ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்தியதாக இராணுவம் தெரிவித்த அடுத்தநாள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்ரான் கானை கைது செய்யும் போது, அருகிலிருந்தவர்களை பாதுகாப்பு தரப்பினர் தாக்கியதாகவும் இம்ரான்கானின் சட்டையை பிடித்து இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரை கைது செய்யும் போது எடுக்கப்பட்ட காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. இம்ரான்கான் அண்மையில் பாகிஸ்தானின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்தை விட மோசமாகியுள்ளது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானில் உள்ள அரசியல் குழப்பநிலையினால் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரையும் இப்போது மற்றுமொரு நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.