சருமத்தில் காணப்படும் வறட்சியை நீக்கி சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும் வல்லமை கடலைமாவிற்கு அதிகம் உண்டு. எனவே கடலைமாவைப் பயன்படுத்தி எமது சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்துகொள்வோம்.
இரண்டு தேக்கரண்டி கடலைமாவு, ஒரு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது சருமத்திலுள்ள வறட்சியை நீக்கி சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும்.
ஒரு தேக்கரண்டி கடலைமாவுடன், ஒரு தேக்கரண்டி தேங்காய் பாலைக் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை காய வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பின்னர் சுத்தமாகக் கழுவி வர, சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் காணப்படும்.
உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றுடன் சிறிதளவு கடலைமாவையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது சருமத்தில் காணப்படும் கருமையை நீக்குவதுடன், சருமத்தை மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகைப் பாதுகாத்துக் கொள்வோம்.