உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் முக்கியமான சாதனம் கையடக்க தொலைபேசிகளாகும். நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அண்மையில் உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இன்றைய டிஜிட்டல் உலகில் செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும், இலாப நோக்கம் இல்லாத தனியார் ஆய்வகம் செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை கொடுப்பது நாகரீகமாகவும், கௌரவமாகவும் ஆகிவிட்டது. இதன் மூலம் தமது குழந்தைகள் டிஜிட்டல் அறிவை பெறுவார்கள் என பெற்றோர்கள் நம்புகின்றனர்.
ஒரு குழந்தைக்கு எவ்வளவு முன்னதாக ஸ்மார்ட்போன் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இளம் வயதிலேயே மனநல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
சிறுவயதிலேயே ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்த இளைஞர்கள் அதிக தற்கொலை எண்ணங்களுடனும், யதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பது போன்ற உணர்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளிலிருந்து அவர்கள் ஒதுங்கி இருக்க நினைக்கிறார்கள். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடும் எண்ணங்கள் அவர்களுக்கு குறைந்திருந்தது.
இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 6 வயது முதல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இளம்பெண்களில் 74 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதும், கடுமையான மனநல சவால்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை இணையத்தில் செலவிடுகிறார்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இது வருடத்திற்கு 2,950 மணி நேரம் ஆகும். ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு இந்த நேரத்தில் நிறைய நேரம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.
ஆகவே குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு பெற்றோர்கள் தங்கள் வேலையில் ஈடுபடாமல், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் இந்த கையடக்க தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துவது முக்கியமானதாகும்.