இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாகக் கூறி எக்கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சம்பளம் கொடுத்து இசையைப் பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
மேலும் இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மாத்திரமே தார்மீக உரிமை கிடைக்கும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால், இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கிவிட்டார் என எக்கோ நிறுவனம் கூறியுள்ளது.
அதனால் பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது எனவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இளையராஜா தரப்பு வாதங்களுக்காக இந்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் கடந்த1991 ஆம் ஆண்டு வெளிவந்த குணா திரைப்படத்தில் இடம்பெற்ற "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடல் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தது. இந்த பாடலை அண்மையில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள்.
இதனையடுத்து, மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளருக்கு எதிராக இளையராஜா வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன் அப்படத்தில் இருந்து தனது பாடலை நீக்குமாறும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது