பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அன்றாட வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதற்கு பாரிய சவால்களை எதிர்நோக்கும் நிலையில், அந்த நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வர யாசகர் ஒருவர் தொடர்பான செய்திகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த யாசகரின் சொத்து மதிப்புப் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுகின்றது. தனது குழந்தைகளை, பாகிஸ்தானின் மிகப்பெரிய பாடசாலைகளில் இவர் சேர்த்துள்ள நிலையில், அவர்களுக்கு அந்த நாட்டு மதிப்பில் 1 கோடி ரூபாவிற்கு வாழ்நாள் காப்புறுதியினையும் செய்து கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் கோடீஸ்வர யாசகரான இவர், உணவு மற்றும் பணம் என்பவற்றைப் பெறுவதற்காக தெருத்தெருவாக யாசகம் பெறுகின்றார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில் வசித்து வரும் இவரது வங்கிக் கணக்கில் தற்போது அந்த நாட்டு மதிப்பில், சுமார் 1.7 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை காணப்படுவதாக அந்த நாட்டின் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இவர் யாசகம் பெறுவதன் மூலம், தினமும் 1000 ரூபாவினை சம்பாதிக்கும் இவர், தனிப்பட்ட ரீதியாக தனது நிதி நிலைமை குறித்து அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஆர்வமாகப் பகிர்ந்து வருகின்றார்.