இந்தியாவின் ஒடிசாவில் ஓய்வூதியம் பெறுவதற்காக மாற்றுத்திறனாளியான மூதாட்டி ஒருவர் 2 கிலோமீட்டர் தூரம் தவழ்ந்து சென்ற காணொளிகள் பார்ப்போரை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
80 வயதான குறித்த மூதாட்டி, மூத்த குடிமக்களுக்கான அரச ஓய்வூதியத்தினைப் பெற்று வருகிறார். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று ஓய்வூதியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தும் குறித்த பகுதி அதிகாரிகள் மூதாட்டியிடம் நேரில் சென்று அவரது ஓய்வூதியப் பணத்தை வழங்காமல் அவரைத் தங்களது அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளனர்.
மிகுந்த ஏழ்மையில் வாடும் குறித்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் அலுவலகத்திற்கு நடந்து செல்ல முடியாமல் தவழ்ந்து சென்று பணத்தைப் பெற்றுள்ளார்.
இவர் தவழ்ந்து சென்றதை காணொளியாக பதிவு செய்த சிலர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதுடன் இது தொடர்பில் குறித்த அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனது தவறை ஒப்புக்கொண்ட குறித்த அதிகாரி மூதாட்டியின் நிலை குறித்து அறியவில்லை என்றும், அடுத்த மாதத்தில் இருந்து மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று பணத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.