ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று அஹமதாபாத் நகரில் 9வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்களது முதல் வெற்றியைப் பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய இரண்டாவது தோல்வியைச் சந்தித்து ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. முன்னதாக இந்த வருடத்தின் முதல் போட்டியில் மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா, தடையின் காரணமாக விளையாடவில்லை. பாண்டியா தலைமையில் 3 முறை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை பந்துவீசவில்லை.
அதனால் 2 முறை அபராதத்தை மட்டும் சந்தித்த பாண்டியா, 3வது முறையில் அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாடத்தடையையும் பெற்றார். அதனால் இந்த வருடம் சென்னைக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் பாண்டியா விளையாடவில்லை.
இந்த நிலையில் தடையிலிலிருந்து மீண்டு வந்த பாண்டியா தலைமையில் மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை பந்துவீசவில்லை. அதனால் 2.2 Slow Over Rate விதிமுறையை மீறிய பாண்டியாவுக்கு இப்போட்டியின் சம்பளத்திலிருந்து 12 இலட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக BCCI அறிவித்துள்ளது.
இந்த வருடத்தில் முதல் முறையாக 2.2 விதிமுறையை மீறுவதால் பாண்டியாவுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படுவதாக BCCI கூறியுள்ளது. மீண்டும் இந்தத் தவறை செய்தால், அவருக்கு அபராதத்துடன் கறுப்புப் புள்ளியும் வழங்கப்படும்.