சருமத்திற்கும் கூந்தலுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பார்த்துக் கொள்கிறோமோ அதுபோலவே நகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிக அவசியம்.
நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசி அலங்கரிப்பது இளம் பெண்கள் பலருக்குப் பிடிக்கும்.
அதேசமயம், நீண்ட நகங்கள் வளர்ப்பது அனைவராலும் இயலாத காரியம். ஆசையாக வளர்க்கும் நகங்கள் சீக்கிரமாகவே உடைந்து விடுகிறன.
ஆகவே, சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நகங்களை எளிதாக பராமரிக்க முடியும்.
சருமத்திற்கு எப்படி ஈரப்பதம் தேவைப்படுகிறதோ அதேபோல நகத்திற்கும் ஈரப்பதம் என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் விரல்களுக்குப் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்து கொண்டால், நகங்கள் வலுவாகவும் வேகமாகவும் வளரும்.
ஒலிவ் எண்ணெய், உங்கள் நகங்களின் உள் அடுக்கை ஊடுருவி ஈரப்பதமாக்குகிறது. அதேவேளை உலர்ந்த நகங்களைக் குணப்படுத்துகிறது.
இது இரத்த ஓட்டத்திற்கும் நகங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளதால், தினமும் ஐந்து நிமிடங்கள் எலுமிச்சையைக் கொண்டு நகங்களைத் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் நகங்களில் உள்ள பக்டீரியாக்கள் நீங்கி சுத்தமாகும்.