தைத்திருநாள் பொங்கலன்று, நமக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்வை அள்ளித் தெளித்திருக்கிறது கோடம்பாக்கத்து படப் பட்டியல்களின் விபர வெளியீடு.
ஏகோபித்த எதிர்பார்ப்புக்கள் நிறைந்திருக்கும் திரைக் காவியங்கள், அபிமான நட்சத்திரங்களின் நடிப்பில், வித விதமான கதைக் களத்தோடு, புதிது புதிதான உத்திகளைக் கையாண்டு நீயா நானா? என போட்டியிட்டு வெளிவர தயாராகவுள்ளன.
இந்தப் படம் வரும், அந்தப் படம் வராது என்று, இடையிடையில் குழப்பங்கள் வேறு பேச்சாக கிளம்பினாலும், இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்தனவே தவிர குறைந்தபாடில்லை. அந்தளவுக்கு வர இருக்கும் ஒவ்வொரு படங்களும் ஏற்படுத்தியிருக்கும் பிரம்மாண்டங்களின் நீளம் அதிகம்!
இந்த வரிசையில் அதிகமாய் பொங்கல் வெளியீடுகளாய் எதிர்பார்க்கப் படும் படங்களைப் பற்றியும், அவைகளின் தற்போதைய நிலை பற்றியும் இந்தச் செய்தி விரிவாய் அலசுகிறது.
♥கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜித்குமார், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் ஆகியோர் நடித்திருக்கும் என்னை அறிந்தால் படத்திற்கு, ஆரம்பம் தொடக்கம் இற்றைவரை ஆதரவும் அகோர எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்துட்ட பாடல்களில், சில பாடல்கள் ஊத்திக் கொண்டாலும் ஏனைய பாடல்கள் எல்லாம் சபாஷ் போடும் ரகம்தான்! பல திரையரங்குகளை தனக்கென இந்தப்படம் பிடித்துக் கொண்டாலும், இடையில் தடாலடியாக படக்குழு 29ஆம் திகதிக்கு ரிலீஸ் திகதியை மாற்றிக் கொண்டார்கள். காரணமாக, படத்தில் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையவில்லை என்று அறிவித்தார்கள். ஆக, என்னை அறிந்தால் பொங்கல் போட்டியில் கலந்து கொள்ளாது என்பது தெளிவாகிவிட்டது.
♥ அடுத்து, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில் விக்ரம், எமி ஜக்ஸன் ஆகியோர் நடித்து இன்னும் பரபரப்பை கூட்டியிருக்கும் படம் ஐ. டிரைலர் மற்றும் பாடல் முன்னோட்டங்கள் மூலமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஓஹோ என்று காணப்படுகிறது. எக்கச்சக்கமான திரையரங்குகளில் ஐ தான் ஆதிக்கமாகியிருக்கிறது. இதுவரைக்கும் நிச்சயப்படுத்தப்பட்ட படமாக உள்ளது ஐ மட்டும்தான்!
♥ அடுத்து ஐயுடன் இணைந்து உறுதிப்படுத்தப்பட்ட பொங்கல் வெளியீட்டில் உள்ள படம், விஷால், ஹன்ஷிகா ஆகியோரின் நடிப்பில் வந்துள்ள சுந்தர்.சி இயக்கியுள்ள படம் ஆம்பள. இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து பொங்கலில் திரையில் தவழும் படமாக இந்தப்படமும் காத்திருக்கிறது.
♥ என்னை அறிந்தால், ஐ, ஆம்பள ஆகிய படங்களே பொங்கல் போட்டியில் இதுவரை குதித்திருந்தும் என்னை அறிந்தால் விலகிக் கொண்டதால், ஏக கொண்டாட்டத்தில் போட்டியிடும் இரண்டு படக்குழுவும் காணப்பட்டன. இப்பொழுது இறுதியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மகிழ்ச்சிக்கு முற்று வைப்பதாய், இன்னும் இரண்டு படங்கள் பொங்கல் ரேஸில் மோதத் தயாராகியுள்ளன.
சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா ஜோடியாகியுள்ள ''காக்கிச் சட்டை'' மற்றும் இசையமைப்பாளர் பாடகரென வலம் வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள ''டார்லிங்'' ஆகிய படங்கள், இந்தப் பொங்கல் போட்டியில் தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளன. எனவே, இப்பொழுது பெரிதாய் எதிர்பார்க்கப்படும் படங்களாக இந்த படங்கள் நான்குமே வரவிருப்பது உறுதியாகி விட்டது.
விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், இரசிகர்களிடையே இந்த படங்கள் தொடர்பான எதிர்பார்ப்பு இன்னுமின்னும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதில் பெரிய படங்களோடு மோதி ஏன் நம்மை நாமே தோல்விப் பாதைக்குள் இட்டுக் கொள்வான் என்று, கார்த்தியின் கொம்பன் படம் தானாக விலகிக் கொண்டது.
மொத்தத்தில், பெரிய படம் சின்னப் படமென மொத்தமாக 4 படங்கள் பொங்கலுக்கு வருகிறது. இவற்றில் இரசிகர்கள் மத்தியில் எந்தப்படம் இடம்பிடித்து வெற்றியடைகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து இரசிப்போம்.