உண்மையில் நடந்தது என்ன......??? - விளக்கம் கொடுத்தது நடிகை தரப்பு.
தென்னிந்தியத் தமிழ்த்திரையுலகில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திர நாயகியாக வலம்வருவதென்பதே ஒரு சாதனையான விடயம்தான். அதிலும், ரசிகர்களின் விதவிதமான ரசனைகளுக்கு ஏற்றவாறான, திரையுலகிற்கு புதுவரவான இளம் நட்சத்திர நாயகிகளுக்கு நெருக்கடி கொடுத்து, போட்டியாக இன்னும் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்திருப்பது யாரோவென்றால் அது நடிகை த்ரிஷா தான்.
த்ரிஷா தற்போது "மோகினி", "சதுரங்க வேட்டை 2", "கர்ஜனை", "1818", "96" ஆகிய படங்கள் உட்பட கைநிறைய பல படவாய்ப்புக்களை வைத்திருக்கிறார். இந்தநிலையில், தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கும் த்ரிஷா, பெங்களூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. உணவு ஒவ்வாமை காரணமாகவே த்ரிஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமுக வலைத்தளங்களினூடாக குறித்த செய்தி மிக வேகமாக பரப்பப்பட்டு வந்தது.
இவ்வாறு பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானதென்று கூறிய த்ரிஷாவின் தாயார் உமாகிருஷ்ணன், இந்த வதந்தி குறித்து ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். மலேஷியாவில் "சதுரங்கவேட்டை-2" திரைப்படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷா கலந்துகொண்டிருப்பதாகவும், அவர் வைத்தியசாலையில் உள்ளதாக பரவும் செய்தி உண்மை இல்லையென்றும் உமா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
அத்துடன், மலேஷியாவில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள த்ரிஷா, எவ்வாறு பெங்களூர் வைத்தியசாலையில் இருக்கமுடியும்..? எனவே இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கொடுத்த விளக்கத்தைத் தொடர்ந்து த்ரிஷா குறித்த செய்தி ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளது.