திரையுலகைப் பொறுத்தவரைக்கும் இப்போதெல்லாம் நடிகர்கள் நடிப்போடு மட்டும் நின்று விடாமல் தமக்கு உள்ள மேலதிக திறமைகளை திரைத்துறையில் வெளிக்கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இசைத்துறை தொடக்கம் திரைப்படத் தயாரிப்பு வரைக்கும் தங்களது திறமைகளை ஒவ்வொருவரும் வெளிக்கொணர, நடிகர்களுக்கு நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று நடிகைகளும் தமது பங்கிற்கு இறங்கியடிக்க ஆரம்பித்து ஒரு சிலர் தங்கள் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த நிலையில், தமக்கிடையிலான நட்பில் நெருக்கம் காட்டும் நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் இணைந்து தாமும் ஒரு படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
திரைப்படத் தயாரிப்பாளர் கனவுடன் அதற்கான கதை மற்றும் இயக்குனர் தேர்வுகளில் மும்முரமாக இருவரும் இறங்கியிருந்த நிலையில், நடிகை தமன்னா தயாரிப்பாளராகும் தனது கனவை கலைத்துப் போட்டுவிட்டார். யார் செய்த உபதேசமோ தெரியவில்லை. இப்போதைக்கு நடிப்பு மட்டும் போதும் என்ற திடீர் முடிவிற்கு வந்துள்ளார்.
தமன்னாவின் தீர்மானம் இப்படியிருக்க, தனித்து முதலீடு செய்தாவது தனது தயாரிப்பாளர் கனவை நனவாக்குவது என்ற உறுதியோடு படத் தயாரிப்பிற்கான அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுத்த நடிகை காஜல் அகர்வால், ஆரம்பநிலையிலேயே தயாரிப்புத் துறையில் தான் எதிர்கொண்ட ஒருசில கடினமான விஷயங்களால் தனித்து படம் தயாரிப்பதில் உள்ள பல நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் உணர்ந்துகொண்டுள்ளாராம்.
அத்துடன், பல கோடிகளை கொட்டி முதலீடு செய்து படத்தை தயாரித்து முடித்துவிட்டாலும் அதை திரைக்கு கொண்டுவந்து வெளியீடு செய்து லாபம் காண்பதிலுள்ள நிச்சயமற்ற நிலையை விடுத்து, தொடர்ந்து இன்னும் பல படங்களில் நாயகியாக நடித்து மேலும் பணம் உழைக்கும் வழியை மேற்கொள்ளுமாறு நடிகை காஜல் அகர்வாலின் குடும்பத்தினரும் அவருக்கு நெருக்கமானவர்களும் தெளிவாக எடுத்துக் கூறியதன் காரணமாக, தயாரிப்பாளர் ஆசையை தூரமாக தூக்கிப் போட்டுவிட்டாராம் நடிகை காஜல் அகர்வால்.