உடலளவில் எவ்வளவு குறைகள் இருந்த போதிலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் மன உறுதியை மட்டும் துணையாகக் கொண்டு சாதித்த, அதிகமானவர்கள் இவ்வுலகில் உள்ளனர். சாதிப்பதற்கு வயது மட்டுமல்லாமல், உடல் குறைபாடும் ஒரு தடையல்ல என்பதை கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நிரூபித்துள்ளார். குறித்த பெண் தொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த இந்தப் பெண், தன்னுடைய மன தைரியத்தாலும்,விடாமுயற்சியினாலும் கடுமையான பயிற்சியினாலும் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற முதல் ஆசிய பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக பல தடவைகள் இவர் விண்ணப்பித்திருந்த போதிலும், இவரது குறைபாடுகளைக் காரணம் காட்டி இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இவர் கார் ஓட்டுவதற்கு வசதியாக உடல் குறைபாடு கொண்டவர்களுக்கான மாநில ஆணையகம் மற்றும் கொச்சியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் உதவியோடு காரின் அமைப்பை மாற்றி வடிவமைத்ததுடன் அதன் பின்னர் இடம்பெற்ற சோதனையில் வெற்றிபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளார்.
இவருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரடியாக அவரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.