இசைஞானி இளையராஜா ஆரம்ப காலத்திலிருந்து படங்களுக்கு இசையமைக்க சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் Studio வையே பயன்படுத்தி வந்தார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பிரசாத் Studio வில் இயங்கி வந்த இளையராஜா வெளியேற வேண்டும் என்று உரிமையாளர்கள் திடீரென்று அறிவிக்க பிரச்சனை பெரிதாகி நீதிமன்றம் வரைக்கும் சென்றது.
இதனை அடுத்து இசைஞானி இளையராஜா வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு பிரச்சனையை சுமுகமாக முடித்து வைக்க முயற்சித்தாலும் பெரியபலன் எதுவும் கிடைக்கவில்லை.
இறுதியாக வழக்கை தான் மீள பெறுவதாகவும் தன்னை இறுதியாக ஒருமுறை அங்கு தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தன்னுடைய விருதுகள் இசைக்கோர்ப்புக்கள் போன்ற தனக்குச் சொந்தமான உடைமைகளை மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றையும் இளையராஜா விடுத்திருந்தார்.
கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் இதற்குச் சம்மதித்திருந்த Studio உரிமையாளர்கள் அவர் இன்று வந்து தியானம் செய்துவிட்டு தன்னுடைய பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் அறிவித்திருந்தார்கள்.
இளையராஜா இன்று அங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குச் சொந்தமான பல பொருட்கள் அங்கிருந்து காணாமல் போயிருந்த நிலையில் இந்தச் செய்தியறிந்த இளையராஜா கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதால் அவர் வரவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் இருதரப்புப் பிரச்சனை இன்னும் பெரிதாகலாம் என்றும் பேசப்படுகிறது.