தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சிறப்பாக பயன்படுத்தி, இரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக்கொண்டவர்.
அந்த வகையில், தற்போது கமலின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் இராணுவ வீரராக நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் தொடர்பில் வெளியான தகவல்களின் படி, அமரன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கக்கூடும் என இரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், A.R முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் நடிக்கின்றார் . இத்திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் தெலுங்குப் படத்தில் நடிக்கப் போவதாகவும் அங்குள்ள இயக்குநர்களுடன் சேரப் போவதாகவும் பல கிசுகிசுக்கள் வெளிவந்தன.
இதற்கு சிவகார்த்திகேயன் “இதெல்லாம் வெறும் வதந்தி மட்டும்தான். இப்போதைக்கு நான் தமிழ் இயக்குநர்களுடன் மட்டும் தான் கூட்டணி வைத்து நடிக்கப் போகிறேன். அதுமட்டுமல்லாமல் என்னை வளர்த்துவிட்டு இந்த நிலைமைக்கு ஆளாக்கியது இங்குள்ள இயக்குநர்கள் தான்.
அதனால் என்றுமே இவர்களை விட்டுவிட்டு நான் காசுக்காக அந்தப் பக்கம் சாய மாட்டேன். இது சத்தியம் “ எனத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.