ஒருவழியாக ரஜினி - பா.இரஞ்சித் இணையும் படத்துக்கு நடிகை கிடைத்துவிட்டார். பாலிவுட் நடிகை ஹூமா குரேஷிதான் அந்த நடிகை. 'ஆம், இவர்தான் நடிக்கிறார்' எனச் சொல்லி, ஒரு வரியில் கடந்துவிட முடியாது. ஹூமாவின் நடிப்பைப் பற்றித் தெரிந்தவரிடமிருந்து "அட... தமிழ்ல நடிக்கிறாங்களா... செம!" என்ற ரியாக்ஷன்தான் வரும். நடித்தது 12 படங்கள்தான், நடிக்கத் தொடங்கி ஐந்து வருடங்கள்தான் ஆகின்றன. அப்படி என்ன செய்துவிட்டார், யார் இந்த ஹூமா குரேஷி?
விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த ஹூமாவை, சினிமாவுக்கு அழைத்துவந்தார் அனுராக் காஷ்யப். ஆனால், அதற்கு முன்பே ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அது அஜித்குமார் நடித்த `பில்லா-2'. படம். தொடங்க தாமதமானதால் படத்திலிருந்து விலகிக்கொண்டார். `பில்லா-2' மூலம் அறிமுகமாகியிருக்கவேண்டியவர், அனுராக்கின் 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' மூலம் அறிமுகமானார். இரண்டு பாகங்களிலும் ஹூமாவின் நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது. இத்தனைக்கும் படத்தில் ஹூமாவுக்கு துணை கதாபாத்திரம் தான்.
அறிமுகமானபோது வழக்கமான பாலிவுட் நடிகைகளை போல உடல்வாகு ஹூமாவுக்குக் கிடையாது. ஆனால், அவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. அடுத்ததாக 'லவ் ஷுவ் தே சிக்கன் குரனா' என்ற நகைச்சுவை படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக நிறைய பாராட்டுகளைப் பெற்றார்.
தே இஷக்யா', 'பட்லபூர்', 'ஹைவே' (மராத்தி) படங்களும் ஹூமாவுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. குறிப்பாக, 'பட்லபூர்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்ததற்கு நிறைய பாராட்டுகளைப் பெற்றார் ஹூமா. இதேபோல மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடித்த ஒயிட், ஹாலிவுட் படமான 'விக்டோரியாஸ் ஹவுஸ்', தன் சகோதரருடன் நடித்திருக்கும் 'தோபரா' படங்கள் எல்லாம் முடித்துவிட்டு இப்போது சூப்பர் ஸ்டார் படத்தில் ஜோடி சேர இருக்கிறார். மிக இயல்பான நடிப்பு, எந்த பாத்திரம் என்றாலும் தயங்காமல் சிறப்பாக நடித்துக்கொடுப்பது எனப் பல திறமைகள் இருந்தும் இன்னும் ஹூமாவைப் பற்றி ஓயாமல் பேசவைப்பதற்கான படம் அவருக்குக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மாதிரியான படமாக அவரின் இந்தத் தமிழ்ப் படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.