எதிர்வரும் ஜூன் மாதத்தின் பின்னர் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வெளியிடவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.வியானி குணதிலக நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 1972 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வந்த லெமினேட் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக இந்த இலத்திரனியல் அடையாள அட்டை பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
15 வயது முழுமை அடைந்த இளைஞர், யுவதிகள் மற்றும் திருத்தம் மற்றும் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காகவும் இந்த புதிய ஸ்மார்ட் அடையாள அட்டை புதிதாக விநியோகிக்கப்படவுள்ளது.
பழைய இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 45 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் தேசிய அடையாள அட்டைகளில் காணப்படும் சில குறைபாடுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், இந்த செயல் தற்போதைய காலத்திற்கு பொருத்தமற்றது எனவும் ஆட்பதிவு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
காலத்தின் தேவைகள் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.