ஈரான் நாட்டில் மர்மமான முறையில் அணு ஆயுத செறிவூட்டல் மையம் உற்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டது.
ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. இதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத செறிவூட்டல் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் , கடந்த சில நாட்களாக அந்நாட்டின் அணு ஆயுத செறிவூட்டல் மையம், பெட்ரோ கெமிக்கல், மையம், திரவ எரிபொருள் உற்பத்தி மையம், மின் உற்பத்தி மையம், மருத்துவமனை உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு பகுதிகளில் மர்மமான முறையில் வெடி விபத்துகளும், தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
தங்கள் நாட்டின் அணு ஆயுத மையம், மின் உற்பத்தி அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் சைபர்
தாக்குதல் நடத்துவதாக ஈரான் அரசு குற்றச்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த மர்ம விபத்துக்களின் வரிசையில் மேலும் ஒரு வெடி விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்நாட்டின் இஸ்பஹன் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திடீரென மர்மமான முறையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்து காரணமாக மின் உற்பத்தி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.
மேலும், நகரின் முக்கிய இடங்களில் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
ஆனால் இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த சில நாட்களாக நடைபெறும் மர்ம விபத்துக்கள் வரிசையில் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மர்ம விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ஆனால் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.