தன் பிறந்த நாளான, நவம்பர் 7ஆம் திகதி முதல், தீவிர அரசியலில் இறங்கவுள்ள நடிகர் கமல், புது கட்சி ஆரம்பம் குறித்த அறிவிப்பையும், அவர் அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், ஊழல் மலிந்துள்ளது; இந்த ஆட்சி தானாகவே கலையும் என, ஆளுங்கட்சியை, கமல் விமர்சித்தார்.
அவரது விமர்சனத்திற்கு, அமைச்சர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். தனியார், டிவியில், கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், அடிக்கடி ஆளுங்கட்சியின் அரசியலை கேலி,கிண்டல் செய்யும் கருத்துக்களை கூறி வருகிறார்.
தேர்தல் நேரத்தில், உங்கள் கோபத்தை காட்டுங்கள் என, டிவி வாயிலாக கமல், ஏற்கனவே மறைமுக பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். எனவே, தீவிர அரசியலுக்கு, கமல் வருவது உறுதி என, அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், கோவையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், கமல் பேசுகையில், அரசியல் சூழலை, இப்படியே விட்டு வைக்காமல், மாற்ற வேண்டியது, நம் கடமை. கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். நான், நேரடி அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றார்.
இது குறித்து, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: ரசிகர் மன்றத்தை, நற்பணி இயக்கமாக மாற்றி, இதுவரை, 40 கோடி ரூபாய்க்கு மேல், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் செய்வதுடன், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி,கம்ப்யூட்டர் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நவ., 7ல், கமல் பிறந்த நாள். அன்றைய தினம், வழக்கம் போல் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், அதன் அரசியல் பிரவேசத்தையும், கமல் அறிவிக்க உள்ளார்.
அனேகமாக, அன்றே தன் புது கட்சி அறிவிப்பை யும் வெளியிடுவார் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.