தற்போது திருமண வைபவங்களில் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பதற்கு மேலாக ஏதோ ஒன்றை புதிதாக செய்து விடுகிறார்கள். இதற்கும் மேலாக திரைப்பட நாயகன் நாயகி தோன்றுவது போன்ற பாவனையில் மணமக்கள் தோன்றும் திருமண வைபவங்கள் இப்போது நடைபெறுகின்றன.
ஆனால் இதற்கு மாறாக ஒரு அழகிய திருமணம், கிராமத்து மண்வாசனையோடு நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில், மணமகள், உறவினர்களை திருமணம் முடிந்த பின்னர், மாட்டு வண்டியில் மணமகன் அழைத்து சென்று அனைவரையும் அதிசயப்பட வைத்துள்ளார்.
ஈரோடு மாவட்ட த்தை சேர்ந்தவர் 28 வயதான கவிஅரவிந்த். பட்டதாரியான இவர், பட்டம் பெற்றாலும், தனது சொந்த கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோன்று 24 வயதுடையவர் பிரவீணா. இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பிரவீணா சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார்.
இந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகின. இதன் போது, கவிஅரவிந்த், தனது திருமணத்திற்கு உறவினர்கள் மாட்டு வண்டியில்தான் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளை உறவினர்களும் மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்களது திருமணம் நேற்று காலை (12 .09 .2018 ) அவர்களது கிராமத்து காளியம்மன் கோயிலில் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின்னர், மணமக்கள் இருவரும் மாட்டு வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர்.
மணமக்களுடன் திருமணத்திற்கு வந்த ஏனைய உறவினர்களும் மாட்டு வண்டியிலே பயணமாகினர்.
இதன் போது மொத்தம் 10 மாட்டு வண்டிகளில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு, சுமார் 5 km தொலைவில் உள்ள வெள்ளாளபாளையத்திற்கு சென்றது.
இந்த அழகிய திருமணம் தொடர்பில் மணமகன் கவிஅரவிந்த் இவ்வாறு விபரிக்கின்றார்... பட்டம் பெற்றும், அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் செய்ய தொடங்கினேன். இன்று விவசாயத்தின் மீது இளைய தலைமுறையினர் பிடிப்பு இல்லாமல் உள்ளனர். கிராமப்புற வாழ்க்கை முறை பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாட்டு வண்டியில் எனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச்சென்றேன்’ என்று கூறினார்.
இதே நேரம் மணமகள் பிரவீணா கூறும்போது, சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். இயந்திரம் போன்ற வாழ்க்கை அது. இன்று எனது திருமண நிகழ்ச்சி மிகவும் மனதுக்கு பிடித்துள்ளது’’ என்று சந்தோசத்தோடு கூறினார்.
இவர்களது திருமண நிகழ்வையும் மாட்டு வண்டி சவாரியையும் பார்த்த பலரும் செல்போனில் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்கள்.
இந்த திருமணத்தின் போது, பிரவீணாவுக்கும் அவரது பெற்றோர் மாடுகளை சீதனமாக வழங்கி சீதன விடயத்தையும் அழகாக்கினார்கள்.