இஸ்ரேல் நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கா பிரீவரி நிறுவனம் புதிய பியர் போத்தலை தயாரித்தது. அந்த மதுபான போத்தலில் மஹாத்மா காந்தியின் படத்துக்கு கருப்பு கூலிங் கிளாஸ் அணிவித்து, கார்டூன் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதை கண்ட இஸ்ரேல் நாட்டில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பிரசுரித்துள்ளார்.
கேரளத்தை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய அமைப்பைச் சேர்ந்த எபி ஜோஸ் என்பவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மதுவை விற்பதற்கு எதிராகவும் அதை பருகுவதற்கு எதிராகவும் காந்தியடிகள் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள மதுபானம் தயாரிக்கும் அனைத்து ஆலைகளையும் மூடுவேன் என முழக்கமிட்டவர் மதுபான போத்தலில் அவரின் படம் இடம்பெற்றுள்ளது, காந்தியவாதிகளுக்கு வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு உடனடியாக காந்தி உருவம் பொதித்த லேபிள்களை நீக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.