சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பல விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்கள், பராமரிப்பு உட்பட, பல்வேறு பணிகளுக்காக, விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு, சில மணி நேரம் வெளியே சென்று, மிதந்தபடி பணி செய்வது வழக்கம். இதுவரையிலும், ஆண் வீரர்களின் துணையுடன் தான், பெண் வீராங்கனையர், ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று வந்தனர்.
இந்நிலையில், பெண்கள் மட்டுமே பங்கேற்கும், விண்வெளி நடைபயண நிகழ்வுக்கு, மார்ச் மாதத்தில், நாசா ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக, கிறிஸ்டினா கோச் மற்றும் அன்னே மெக்லைன் என்ற, இரு விண்வெளி வீராங்கனையரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விண்வெளியில் பயன்படுத்தும் மின்கல ஆடை பற்றாக்குறையின் காரணமாக இந்த நிகழ்வை, நாசா ரத்து செய்தது.
விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச்சுடன், ஜெசிகா மேயர் இருவரும் கடந்த மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணமான போது, தேவையான அளவிலான மின்கல ஆடைகளை எடுத்து சென்றதனால் பெண்கள் மட்டுமே பங்கேற்கும், விண்வெளி நடைபயண நிகழ்வு இம் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ளது.