குறும்புத்தனமான தனது நடிப்பால் பலரின் மனத்தைக் கொள்ளையடித்த நடிகை சமந்தா, இனி வரும் காலங்களில் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நடிகை சமந்தா,''நான் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில், அதிகமான படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. எனவே நடிப்பு திறமையை வெளியே கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். நடிகையாக எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும், படப்பிடிப்பு தளத்தில் எனக்கு அதிக பதற்றம் இருக்கும். படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்ததும் எதிர்பாராத பயம் என்னைத் துரத்தும்.
இயக்குனர் அல்லது படப்பிடிப்பாளர் ஏதாவது சொன்னால் பதற்றம் இன்னும் உச்சத்துக்கு போய் விடும். ஆனால் அதை யாருக்கும் தெரிகிற மாதிரி காட்டிக் கொள்ள மாட்டேன். புதிய நடிகையாக அந்த கதாபாத்திரத்துக்குள் செல்ல வேண்டும் என்ற உணர்வும், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் தான் அந்த பயத்துக்கு காரணம். 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.'' என கூறியுள்ளார்.
இவரது கருத்துக்கு, பல இணையவாசிகள் தமது சமூக வலைத்தளங்களில் வரவேற்ப்புக்களைத் தெரிவித்துள்ளனர்.