அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற தாய்வான் பெண்ணுக்கு சீன ஏயார்லைன்ஸ் விமான நிறுவனம் அபராதம் விதிக்கவுள்ளது.
கடந்த 8ஆம் திகதி சீனாவைச் சேர்ந்த விமானம் ஒன்று தாய்வான் நாட்டின் தலைநகர் தாய்பேயிலிருந்து அலஸ்கா வழியாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு பயணித்தது.
அந்த விமானத்தில் தாய்வான் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணித்தார். விமானத்தில் பயணம் செய்தபோது, திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அலஸ்கா நகரின் மீது பறந்தபோது, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
இது குறித்து விமானத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்தபோதும் அதை மறைத்து விமானத்தில் அந்த பெண் பயணம் செய்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து அமெரிக்கா சென்ற விமானத்தை மீண்டும் தாய்பேய் நகருக்கு திருப்ப காரணமாக இருந்த பெண்ணிடம் இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவரிடம் 33,000 டொலர் நஷ்ட ஈடு கோரப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.