இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரர் சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக முன்னர் கடமையாற்றியவர்.
அதன் பின் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஏற்பட்ட இழுபறிகள், குளறுபடிகள் காரணமாக அவுஸ்திரேலியாவின் Big Bash Leage அணிகளில் ஒன்றான சிட்னி தண்டர் (Sydney Thunder) அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக சிறப்பாக செயற்பட்ட இவரது திறமையைக் கண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இவரைத் தனது பயிற்றுவிப்பாளாராக வளைத்துப்போட்டது.
ஹதுரு பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளர் ஆன பின்னர், இலங்கையின் முக்கிய காய்கள் மீது அவரது சிபாரிசில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கவனம் திரும்பும் என சூரியன் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அடிக்கடி சொல்லி வந்திருந்தோம்.
இப்போது அது நடக்க ஆரம்பித்திருக்கிறது.
உள்ளூர் அனுபவத்தை வைத்து நீண்டகாலமாக அடிப்படையிலிருந்து கட்டியெழுப்பபட்டு வந்த இலங்கையின் பயிற்றுவிப்புக் குழாமின் இரு முக்கிய தூண்கள் வங்கப் பக்கம் நகர்வதாகத் தெரியவந்துள்ளது.
இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ருவான் கல்பகேயும், சுழல்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியால் விஜேதுங்கவும் நேற்று தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தனர்.
இவர்கள் இருவருமே பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடமிருந்து ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
உறுதியான ஒப்பந்தம், நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை விட நம்பிக்கையான ஊதியம் + வசதிகள் வழங்கப்படுவதால் இவர்களது வெளியேறல் உறுதி போலவே தெரிகிறது.
நிரந்தர பயிற்றுவிப்பாளர் ஒருவரை பாகிஸ்தானிய தொடரின் பின் இலங்கை தேடவிருப்பதைப் போல, இந்தப் பதவிகளுக்கும் பொருத்தமானவர்களைத் தேடவேண்டி இருக்கும்.
இன்று இவர்கள் இருவரையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.
இது ஏதாவது நல்ல முடிவுகளைத் தருமா என்று பொறுத்திருந்து தான் அறிந்துகொள்ள முடியும்.