தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் "மாஸ்டர்" திரைப்படம் எதிர்வரும் 13ம் திகதி திரை காணவுள்ள நிலையில், நடிகர் தனுஷின் டுவிட்டர் பதிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னரே திரைகண்டிருக்கவேண்டிய "மாஸ்டர்" திரைப்படம், கொரோனா உலகப்பரவல் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தால் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அதனை OTT தளத்தில் வெளியீடு செய்வதற்கான முயற்சி சில தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.
இருந்தும், அதனை மறுத்த படக்குழு "மாஸ்டர்" படத்தை திரையரங்குகளில் காட்சிப்படுத்தும் முன்னெடுப்பை மேற்கொண்டதுடன், ஒருசில தினங்களுக்கு முன்னர் தற்போதைய ஆட்சியிலுள்ள அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்திருந்தார்.
இதனடிப்படையில், எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 13ம் திகதியன்று "மாஸ்டர்" திரைப்படம் திரையரங்குகளை களைகட்ட வைக்கும் என்ற எதிர்பார்ப்பு 'தளபதி' ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கித்த திளைக்க வைத்துள்ளது.
இது தொடர்பில் நடிகர் தனுஷ் டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் தனது பிரத்தியேக பக்கத்தினூடாக பதிவிடுகையில்,“விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. சினிமா பிரியர்களுக்கு இது மிகச் சிறந்த செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று திரைப்படம் பார்க்க ஆரம்பித்தால் தியேட்டர் கலாச்சாரம் என்பது மீண்டும் செழிக்கும் என நம்புகிறேன்.
தியேட்டர் அனுபவம் போல எதுவும் கிடையாது. தேவையான அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு படத்தைத் தியேட்டரில் சென்று பாருங்கள்” என குறிப்பிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.