நேர்த்தியான கூந்தலைப் பெற, சிறந்த பராமரிப்பு அவசியமானதாகும். நம்மில் பலர் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை.
இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறு விதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடும் என கூறப்படுகின்றது.
பெண்கள் இரவில் தூங்கும் போது கூந்தலை இறுக்கமாக கட்டிக் கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறான பழக்கமாகும். அப்படி இறுக்கமாக கூந்தலில் கொண்டை போட்டுக் கொள்வது மயிர்கால்களை கடுமையாக பாதிக்கும்.
கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது. அதனால் கூந்தல் முடிகள் பாரியளவில் பாதிப்புக்குள்ளாகும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பின்னந்தலையில் வியர்வையோ, ஈரப்பதமோ படிந்திருக்கிறதா? என்று பார்ப்பதும் அவசியமானது.
ஏனெனில் அப்படி ஈரப்பதம் இருந்தால் அது மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாக பொடுகுத் தொல்லை, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இரவில் குளித்தால் கூந்தலை நன்றாக உலரவைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும்.
இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து மயிர்கால்களுக்கு மசாஜ் செய்து விடுவது நல்லது. அதன் மூலம் மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
மயிர்கால்கள் வலுப்படுவதால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். இரவில் கூந்தலை மசாஜ் செய்து விட்டு தூங்கினால் காலையில் எழுந்ததும் தலைக்கு குளித்து விடுவது நல்லது.
தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். ஏனெனில் தினமும் அதில் தலையை வைத்து படுக்கும் போது அதில் அழுக்குகள் சேர்ந்து விடும்.
தலையில் இருக்கும் எண்ணெய்யும் தலையணை உறையில் படிந்து அழுக்குடனும் சேர்ந்து விடும். அதில் தொடர்ந்து தலை வைத்து படுப்பது முடிக்கு பாதிப்பாகி விடும்.
இவ்வாறு பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக எமது கூந்தலை சிறப்பாக பாதுகாக்க முடியும்.