எகிறிக் குதித்த பந்து உதறித் தள்ளியது பில் ஹியுசின் கிரிக்கெட் எதிர்காலத்தை-மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் ஹியுஸ்.இன்றைய நவம்பர் 27 ம் திகதி எல்லோரையும் உறைய வைத்த நாள்,உணர்வுகளை கொஞ்சம் கட்டிப்போட்ட நாள்,பிரார்த்தனைகளோடு கைகூப்பி கடவுளை பிரார்த்தித்த நாள்.கவலையோடு கவலையாய் கரைந்து போகிறது இன்றைய நவம்பர் 27.
கிரிக்கெட் உலகில் ஓர் கறைபடிந்த நாளாய் எல்லோரையும் கவலையில் ஆழ்த்தியிருக்கின்றது பில் ஹியுசின் இந்த திடீர் மரணம்.
கடந்த 25 ம் திகதி பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியின் போது தலையில் பந்து பலமாக தாக்கப்பட்ட நிலையில் ஊசலாடிய இவர் உயிர் இன்று இவ்வுலகை விட்டு நிரந்தரமாகவே பிரிந்திருக்கிறது.
வாழ்ந்தது வெறும் 25 வயது வரைதான் என்பதில் எல்லோருக்கும் கவலை இருக்கலாம். இதைவிடவும் இன்னுமோர் கவலை இருக்கிறது எதிர்வரும் 3 தினங்களில் இந்த வீரனுக்கு பிறந்த நாள் வருகின்றது.
பிறந்த நாள் வரும் நேரம் இறந்த நாளை எண்ணி கண்ணீர் விட்டு அழவைத்து காலன் இவன் உயிரை பறித்தெடுத்திருக்கிறான்.
ஹியுஸ் அவுஸ்ரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும்,25 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009-ல் இளம் கிரிக்கெட் வீரருக்கான பிராட்மன் விருதைப் பெற்றார் பிலிப் ஹியூஸ். அப்போது அதிரடி ஆரம்ப வீரர் ஹெய்டன் ஓய்வை அறிவிக்க, அவரது இடத்தை நிரப்ப இந்த இளம் பிலிப் ஹியூஸ் ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் தென்னாபிரிக்க A அணிக்கெதிரான போட்டியில் ஆட்டமிழக்காது 202* ஓட்டங்களை பெற்று ஒரு அவுஸ்ரேலியரின் முதல்தர /ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையும் படைத்து தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்து பெரும் கனவுகளோடு பயணித்த ஒரு வீரனின் சாதனை பயணம் இப்போது வேதனையோடு முடிவுக்கு வந்திருக்கின்றது.
சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள உலக கிண்ணத்துக்கான அவுஸ்ரேலிய அணியில் இடம் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருப்பார்.இதைவிடவும் அவுஸ்ரேலிய டெஸ்ட் அணித்தலைவர் கிளார்க் உபாதை அடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள போட்டியில் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தும் பல்நோக்கில் பந்துகளை நாற்திசையும் விரட்டி களமாடிய ஓர் இளம் வீரனை காவுகொண்டிருக்கின்றது எகிறிக் குதித்த bouncer பந்தொன்று.
கிரிக்கெட்டில் இதுமாதிரியான கறைபடிந்த நிகழ்வுகள் இதுவரை 5 இடம்பெற்றிருக்கின்றது.இந்திய வீரர் ராமன் லம்பா முதல் வீரரராக களத்தடுப்பில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் பந்து பலமாக தாக்கி மரணமானார்.இறுதியாக பாகிஸ்தானின் 22 வயதான இளம் துடுப்பாட்ட வீரர் Zulfiqar Bhatti கடந்த டிசம்பரில் பந்து தாக்கி மரணமானமையும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான மரணங்கள் இதுவரை சம்பவித்தாலும் இந்த பில் ஹியுசின் மரணம் இப்போது எல்லோரையும் அதிகம் கதிகலங்கச் செய்திருக்கின்றது.
அதுவும் இந்த வீரனின் தாயார்,சகோதரி ஆகியோர் போட்டியை கண்டு கழித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் கண்முன்னே இந்த விபரீதம் நடந்தேறியிருக்கின்றது.
இந்த விபரீத விபத்துக்கு காரணமாக இருந்தது அவர் அணிந்திருந்த தலைக்கவசம் தான் காரணம் என்று கருதப்படுகின்றது.ஆனாலும் கூட அதனை மறுத்து அந்த தலைக்கவச நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.
நவீனரக ஹெல்மெட்டை அணியாமல் பழைய மற்றும் மெல்லிய ஹெல்மட்டை ஹியூஸ் உபயோகித்ததாக பிரிட்டனை சேர்ந்த ஹெல்மட் தயாரிப்பு நிறுவனமான மசூரி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "ஹியூஸ் அணிந்திருந்த தலைக்கவசம் தொடர்பாக அவர் விளையாடிய போட்டியின் வீடியோ பதிவின் மூலம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
பந்து ஹெல்மட் கிரிலுக்குப் (தடுப்பு) பின்னால் மண்டை ஓட்டுப் பகுதிக்கு கொஞ்சம் கீழே தாக்கியிருக்கிறது.
பந்துக்கு ஏற்றவாறு ஒரு துடுப்பாட்ட வீரன் உடலை அசைத்து விளையாடும் போது கழுத்து மற்றும் தலைக்கு இடையிலான பகுதியை தலைக்கவசத்தால் முழுவதுமாக பாதுகாக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .
இதேவேளை பிலிப் ஹியூசிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட செண்ட் வின்செண்ட் மருத்துவமனை மருத்துவர் டோனி கிராப்ஸ் அவர்களின் கருத்துப்படி பவுன்சர் பந்தில் அடிபட்டு இத்தகைய தீவிர காயம் ஏற்படுவது அரிதிலும் அரிது என்று குறிப்பிடுகிறார்.
மூளைக்குச் செல்லும் மிக முக்கியமான ரத்த நாளங்களில் ஒன்று கடுமையாக அழுத்தப்பட்டு நசுங்கிப் போய் விட்டது. பந்து அந்த அளவுக்கு படு வேகமாக தாக்கியுள்ளது. இதுதான் அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம் என்கிறார்.
எங்களது மருத்துவமனயில் இதுபோல இதுவரை எந்த நோயாளியும் வந்ததில்லை. இது மிக மிக அரிதானது.
மொத்தமாகவே இதுவரை இது போன்ற நிலை 100 பேர்களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கிரிக்கெட் பந்தில் அடிபட்டு இப்படி நிகழ்வது ஒரேஒரு முறை ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் சொல்கின்றனர்.
எது எப்படியாயினும் பில் ஹியுசின் இந்த மரணம் இன்னும் பல நாட்களுக்கு பலரையும் இந்த எகிறிக் குதிக்கும் பந்துகளால் பயமுறுத்தலாம் என்பது திண்ணமே.
எங்கள் காலத்தில் நாங்கள் கிரிக்கெட் பார்த்து ரசித்த மேற்கிந்திய தீவுகளின் காட்னி வால்ஷ்,அம்புரோஸ்,தென் ஆபிரிக்காவின் அலன் டொனல்ட் ,ஷோன் பொல்லாக் இலங்கையின் சமிந்த வாஸ் ,இந்தியாவின் ஸ்ரீநாத் பாகிஸ்தானின் வாசிம்,வக்கார்,அக்தார் அவுஸ்ரேலியாவின் மக்ராத்,ப்ரெட் லி ,பிளெமிங் ,கில்லெஸ்பி என்று ஏராளமான புயல் வேகப் பந்தாளர்களை பார்த்திருக்கிறோம்.
எதிரணி வீரன் ஒருவன் பந்துகளை பந்தாடி அடித்து நொறுக்கும் போது அவனை பதம் பார்க்க ஏன் ஒரு bouncer வீசக்கூடாது என்றும் அங்கலாய்த்திருக்கிறோம்.ஆனால் அப்போது எல்லாம் இப்படியான விபரீத மரணங்கள் நேர்ந்ததில்லை.
இப்படியான பந்துகளை இப்போதும் துல்லியமாய் வீசும் வேகப் புயல்களை சொல்லிப் புரிய வைக்க வேண்டிய தேவையில்லை எனலாம்.
இனி வரப்போகின்ற நாட்களில் பந்து வீச்சாளர்களின் ஒரேயொரு கூரிய ஆயுதமாக பாவிக்கப்பட்ட இந்த மாதிரியான பந்துகளுக்கு தடை வரலாம் என்ற கதையும் அதிகம் உலாவுகின்றது.
ஆனது ஆகட்டும் போனது போகட்டும் என்று 25 வயதான பில் ஹியுசின் மரணம் எல்லோராலும் மறக்கப்படலாம் ,சிலவேளைகளில் இப்படியொரு சம்பவம் இன்னுமொரு தடவை நடந்தால் அப்போது எங்களுக்கு இந்த பில் ஹியுஸ் நினைவுக்கு வந்து போகலாம்.ஆனால் அணுவணுவாய் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நொடியும் இவர் பிரிவால் இன்னுமொரு வீரன் அனுதினமும் மரணிக்கபோகின்றான்.
சர்வதேச அரங்கில் இன்னும் பிரகாசமாய் ஆடவேண்டும் என்ற ஆசையோடு காத்திருக்கும் இந்த வீரனின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடக்கூடாது என்பதுதான் எல்லோர் விருப்பமும்.
அவன் பெயர் ஷோன் அப்புட்.
வயது 22.
பில் ஹியுசின் மரணத்துக்கு காரணமான அந்த கோர BOUNCER பந்தை வீசிய வீரர் இவர்தான். துடிப்பான இந்த வேகபந்து வீச்சாளன் முதுகில் ஏறி பந்து மூலமாய் வேகமெடுத்து பில் ஹியுசின் உயிரை காலன் காவிச்சென்றததற்கு நாங்கள் காலகாலமாய் அந்தப் பழியை இந்த பால்வடியும் பாலகனிடம் கட்டி இவன் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி விடக் கூடாது என்பதுவே எல்லோர் விருப்பமுமாகும்.
சர்வதேச வீரர்கள் பலரும் தங்கள் கண்ணீர்க் காணிக்கைகளை செலுத்தலாம், சமூக வலைத்தளங்களில் இன்னுமின்னும் இவருக்கு அஞ்சலிகள் அதிகரிக்கலாம்,ஏன் போட்டிகளும் தள்ளிப் போகலாம் எல்லாம் நடக்கலாம் ....
இதுவும் கடந்து போகும் என்று நாளடைவில் நம் மத்தியில் பில் ஹியுசின் நினைவுகளும் மரித்துப் போகும்.
எட்டத்தே தள்ளி வைக்க நினைத்தாலும் எட்டுத் திக்குகள் சென்று வந்தாலும் எப்போதும் எங்கள் எல்லோரையும் விட பில் ஹியுஸ் நினைவுகள் நிழலாடுவது அவர் குடும்பத்தாருக்கு மட்டுமே என்றால் அது ஒன்றும் மிகையல்லவே.
கிரிக்கெட் ரசிகர்களாய் இவர் குடும்பதுக்காக பிரார்த்திப்பதை தவிர எங்களால் என்னதான் செய்துவிட முடியும் என்று சிந்திக்கின்ற போது வாய்மூடி மௌனியாகிறோம்.
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் யாரும் மாநிலம் வந்தது இல்லைதானே ,இந்த மகோன்னத மாவீரனின் மறைவால் இந்த கிரிக்கெட் உலகம் இப்போது ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.
கரம் கூப்பி பிரார்த்திப்போம் களமாடிய மாவீரன் மறைவுக்கு.
ஆத்மா சாந்தியடையட்டும்.
*தில்லையம்பலம் தரணீதரன் 5.
பந்து வீசிய 22 வயதான sean abbott மருத்துவ மனைக்கு சென்று பார்வையிட்டு மனமுடைந்து திரும்பும் போது. 6.கவலையில் அவுஸ்ரேலிய வீரர்கள். #twitter தளத்தில்.