பவுன்சர் தாக்கி உயிருக்கு போராடும் பில் ஹியூஸ்!கிரிக்கெட் வீரர்களை கிலி கொள்ளச் செய்யும் ஓர் பந்து வீச்சு முறையாக இப்போது இந்த பவுன்சர் பந்து காணப்படுகின்றது.அதிரடியாக ஒரு வீரர் அடித்து ஆடி பந்து வீச்சாளர்களை பந்தாட நினைக்கும் போது அவரை கொஞ்சம் பயமுறுத்தும் விதமாகத்தான் இந்த சீறிப்பாய்ந்து தங்கள் சீற்றத்தையும் வேகத்தையும் காட்டும் BOUNCER பந்துகள் வீசப்படுவதுண்டு.
ஒரு ஓவருக்கு ஒரு பந்து இவ்வாறு வீசப்படலாம் என்ற அடிப்படையில் வேகப்பந்து வீரர்கள் துடுப்பாட்ட வீரர்களை கதிகலங்கச் செய்ய இவ்வாறு களத்தில் கச்சிதமாக இந்த பவுன்சர் பந்தை பயன்படுத்துவது வழமையே.
இப்படியிருக்கையில் இவாறான பந்துகளில் பலர் படுகாயமடைந்து ஆடுகளம் விட்டு அகன்ற சம்பவங்கள் இருந்தாலும் இவ்வாறான பந்துகள் மூலம் ஒரு வீரரின் உயிர் பறிக்கபடுகின்றது என்றால் அது பரிதாபமே!
இன்று இதுதான் நடந்திருக்கிறது.சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பில் ஹியூஸ்க்கு வீசப்பட்ட பவுன்சர் பந்தொன்று அவரை தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் இப்போது உயிருக்கு போராடி வருகிறார்.
இந்திய வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கெடுக்க தயாராகி வரும் நிலையில் இந்த படுபயங்கர நிகழ்வு பதிவாகி அவர்களையும் கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்திருக்கிறது எனலாம்.
ஏற்க்கனவே வெளிநாட்டு மண்ணில் வேகபந்து வேகமாக ஆட்டமிழக்கும் இந்திய வீரர்களின் இப்போதைய மனநிலை என்னவாகவிருக்கும் என்பதை சொல்லி புரிய வைக்கும் தேவையில்லை.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணித்தலைவர் கிளார்க்குக்கு பதிலாக அணிக்கு அழைக்கப்படலாம் என்ற நிலையில் எதிர்பார்ப்புகளோடு காத்திருந்த பில் ஹியூஸ் தென் அவுஸ்ரேலியா அணிக்காக 63 ஓட்டங்கள் பெற்று ஆடிகொண்டிருந்த போது நியூசவுத்வேல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் சோன் அபோட் வீசிய பயங்கர பவுன்சர் பந்து இடது கை துடுப்பாட்ட வீரரான இவரின் இடது காதுப்பக்கமாக மண்டையை பதம் பார்த்தது.

மிகவும் தள்ளாடிப்போன அவர் சிறிது நேரம் முழங்காலில் தன் கையை ஊன்றி சுதாகரித்துகொண்டார் பின்னர் சிறிது நேரத்தில் உடனடியாக செயற்த்திறன் இழந்து ஆடுதளத்தில் மயங்கி விழுந்தார்.
மயங்கி விழும் போதும் தரையில் தலை சற்றே வேகமாக மோதியுள்ளது. அவருக்கு வீசப்பட்ட பந்தை hook shot முறையில் துடுப்பாட முயன்றார் ஆனால் பந்து மட்டையில் படாமல் இவரை ஏமாற்றி மண்டையை பலமாக பதம் பார்த்தது.
இதன்மூலம் பதற்றத்துக்கு மத்தியில் மைதானத்துக்கு உலங்கு வானூர்தி வரவளைக்கப்பட்டு மருத்துவ மனைக்கு இட்டு செல்லப்பட்டார்.
மூளைக்கு செல்லும் இரத்த நாளத்தில் கசிவும் ,உறைவு நிலையும் இருப்பதனால் மருத்துவர்கள் இப்போது இவரது உயிரை காப்பாற்ற பகீரதபிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.
ஆயினும் 24-48 மணிநேரத்தின் பின்னரே அடுத்தகட்ட சிகிச்சைக்கு இவர் உட்படுத்தபடுவார்.ஓரளவிற்கு சுவாசம் செய்யக்கூடியதாக இருப்பினும் அவரால் இயல்பு நிலையை பெறுவது என்பது அவ்வளவு இலகுவானதாக இப்போதைய நிலையில் இல்லை என்றே அறியக் கிடைக்கிறது.
இப்போதைக்கு அவர் மருந்துகள் மூலம் கோமா நிலைக்கு செலுத்தப்பட்டுள்ளார். உயிர்காப்பு அமைப்புகளுடன் அவர் தற்போது இருந்து வருகிறார். இப்போதைக்கு ஒன்றும் கூறுவதற்கில்லை என்று மருத்துவர்கள் கூறிகின்றனர் .
இவரது ஆட்டத்தை இவரது தாயாரும், சகோதரியும் கண்டுகளித்துக் கொண்டிருந்தநிலையில் பில் ஹியூஸ் இந்த ஆபத்தை சந்தித்துள்ளார் என்பதும் கவலைதான்.
சர்வதேச விளையாட்டரங்கில் பனிசறுக்கலில் ஈடுபட்டு விபத்துக்குளாகி அண்மைய நாட்களாக கோமா நிலையில் பிரபல கார்பந்தைய வீரர் மைக்கல் சூமார்கர் இருந்துவரும் நிலையில் இன்னுமொருவருக்கும் இதே நிலையா என்பதே ரசிகர்களது தற்போதைய கவலையாகும்.
தலைகவசங்களே இல்லாமல் பந்து வீச்சாளர்களை பந்தாடிய முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் போன்றோர் எங்கள் நினைவுகளுக்கு இப்போது வந்தாலும் கூட பரிதாபமாய் ஒரு இளம் வீரர்னின் உயிரை இறைவன் பறித்துவிடகூடாது என்பதுவே எல்லோரது பிரார்த்தனையுமாகும்.
எதிர்வரும் நவம்பர் 30 ம் திகதி 26 வயதில் கால்பதிக்க இருக்கும் ஹியுஸ் அவுஸ்ரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும்,25 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் தென்னாபிரிக்க A அணிக்கெதிரான போட்டியில் ஆட்டமிழக்காது 202* ஓட்டங்களை பெற்று ஒரு அவுஸ்ரேலியரின் முதல்தர /ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையும் படைத்து தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்து பெரும் கனவுகளோடு பயணித்த ஒரு வீரனின் சாதனை பயணம் வேதனையோடு முடிவுறக் கூடாது என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகும்.
மீண்டு வரட்டும்..
மீண்டும் வரட்டும்...
மைதானத்துக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை
மகனாய் அவர் தாய்க்கு வந்துவிடட்டும்.
*தில்லையம்பலம் தரணீதரன் 1.பந்து தாக்கப்படும் போது.
2.பந்து தாக்கப்பட்ட பின்னர்.
3.மயங்கி ஆடுதளத்தில் வீழ்ந்தார் . 
4.
5.உலங்கு வானூர்தியில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல தயாரான நிலையில்..