பல ரசிகர்களை கவரும் நல்ல திரைப்படங்களில் நடித்து, தனக்கான ஒரு தனி இடத்தை பெற்றவர் நடிகர் விஷால். இவரது திரைப்படங்களான சண்டக்கோழி,தாமிரபரணி,திமிரு,பூஜை,நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல சர்ச்சைகளை நடிகர் விஷால் சந்தித்தமை பலரால் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தமிழ் திரையுலகின் நடிகர் சங்க செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியை பெற்ற விஷால், இனி வரும் காலங்களில் எனது திரையுலக பயணம் எல்லோருக்கும் ஓர் முன்னோடியாக இருக்கும் என கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஷாலின் திருமணம் பற்றிய பேச்சு தற்போது சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் விஷாலின் திருமணத்தை பற்றி அவரது தந்தையிடம் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் வழங்கிய விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி, நாங்களும் அதற்குத்தான் காத்திருக்கிறோம் , திருமணம் பற்றி விஷாலிடம் தாம் கலந்துரையாடிய போது, முதலில் இந்த படம் ரிலீஸ் ஆகட்டும் , அந்த படம் ரிலீஸ் ஆகட்டும் சொன்னார். அதன் பிறகு நடிகர் சங்க தேர்தல் முடியட்டும் என்றார். இப்போது நடிகர் சங்க கட்டிடம் முடிந்த உடனே என்னுடைய திருமணம் நடக்கட்டும் என கூறியதாக விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் விஷாலின் தங்கைக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனது தங்கையின் திருமணம் முதலில் முடியட்டும்.அதற்கு பிறகு எனது திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என கூறுவதாக விஷாலின் தந்தை புலம்பியுள்ளார்.