இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தில் வசித்து வந்த பெண்ணொருவர், தனது கணவரை வெட்டிக் கொலை செய்து உடலத்தை மறைத்து வைத்த சம்பவம், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குடிக்கு அடிமையான கணவர், தினமும் அவரது மனைவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த குறித்த நபரின் மனைவி, தனது பொறுமை இழந்து கணவருடன் கடுமையான வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான பெண், சமையல் அறையில் இருந்த கத்தியைக் கொண்டு தனது கணவரை துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
அத்துடன் கணவரின் உடலத்தை யாருக்கும் தெரியாமல், வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார். எனினும் நாட்கள் செல்லச் செல்ல வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, அழுகிய நிலையில் இருந்த உடலத்தை மீட்டுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.