கலைஞர் கருணாநிதியின் ஓய்வுக் காலத்தில் அவரை தினமும் சந்தித்து, அவருடன் செல்லம் கொஞ்சி விளையாடி மகிழ்வூட்டிய கொள்ளுப்பேரன் மகிழன் தொடர்பில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் பெரியளவான புகைப்படம் ஒன்று அவரது பூதவுடல் புதைக்க பட்ட சமாதியில் உள்ளது. இதை பார்த்த அவரது கொள்ளுப்பேரன் மகிழன் குதூகலித்த காட்சி, அனைவரையும் நெகிழ வைத்தது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வெடுத்த நேரத்தில் அவர் பேசவும், பொழுதைக் கழிக்கவும் அவரது பேரன் அருள்நிதியின் 2 வயது மகன் மகிழன் பெரிதும் உதவியாக இருந்துள்ளார்.
ஒரு காலத்தில் 18 மணி நேரத்திற்கு மேலாக உழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இயல், இசை, நாடகம், அரசியல், எழுத்துப்பணி என அனைத்து துறைகளிலும் பிரகாசித்தவர் கலைஞர்.
தனது வாழ்நாளில் நேரத்தை வீண் விரயம் செய்யாது உழைப்பிலும், புத்தகம் வாசிப்பதையும், எழுத்துப்பணியையும் தனது வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டவர் கருணாநிதி.
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 2016-ம் ஆண்டு வரை முழுநேரமும் இயங்கக்கூடிய ஒரு அரசியல் தலைவராக இவர் திகழ்ந்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் வைரவிழா கண்ட அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். திராவிட இயக்கத் தலைவர்களில் மூத்த தலைவரான கருணாநிதியின் ஆளுமை தனித்துவம் மிக்கது.
‘ஓய்வுக்கு ஓய்வு கொடுப்பவர்’ என்று கட்சிக்காரர்களால் பெருமிதமாக பேசப்பட்ட கருணாநிதியையும், இயற்கையின் ஒத்துழையாமை பின்நாட்களில் கட்டிப்போட்டது.
அவரது முதுமை அவரை ஒரே அறைக்குள் சிறைபிடித்தது. தனது பேச்சாற்றலால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவரை இயற்கை இயல்பாக தன்பக்கம் இழுத்து ஓய்வு அறிவித்தது.
அவரது நோய் காரணமாக, தொண்டையில் பொருத்தப்பட்ட குழாய் பேசுவதற்கு சிரமத்தை உருவாக்க அவர் பெரிதும் ஓய்வெடுக்க வேண்டியவராக மாறினார்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வந்த அவருக்கு உற்சாகத்தைத் தரும் மருந்தாக அவருடன் செல்லம் விளையாடியது கொள்ளுப்பேரன் மகிழன்தான்.
தனது கொள்ளுப்பேரன் மகிழனுடன் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை கலைஞர் கருணாநிதி தனது பொழுதை கழித்துள்ளார்.
பேரனின் மகனான மகிழனுடன் விளையாடுவதை அவர் அதிகம் விரும்பினார். அப்படி விளையாடியது அவருக்கு நிறைந்த உற்சாகத்தை தந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தும் உள்ளனர்.
அவரின் கடைசி ஓராண்டில் அவரது உற்ற தோழனாக தினமும் அவரை சந்தித்து உற்சாகப்படுத்தி வந்தது அவரது பேரனின் மகன் மகிழன் தான் என்று கூறப்படுகிறது.
கருணாநிதியிடம் மிகவும் ஒட்டுதலாக இருந்த பேரன் மகிழனுக்கு அவரது மரணம் கூட புரியவில்லை.
இந்த நிலையில், நேற்று மாலை கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவரது குடும்பத்தார் பேரன் மகிழனையும் அழைத்து வந்திருந்தனர். சமாதியில் பூக்களால் அலங்கரித்து கருணாநிதியின் படமும் வைக்கப்பட்டிருந்தது.
அனைவரும் அஞ்சலி செலுத்தியபோது அருள்நிதியின் தாய் தனது பேரனை கீழே இறக்கிவிட்டார். தாத்தாவின் படத்தைப் பார்த்து உற்சாகமான மகிழன் கைகளை உயர்த்தி, குனிந்து தாத்தாவின் சமாதியில் குழந்தைக்கே உரித்தான குறும்புடனும், குதூகலத்துடனும் வணங்கினான். தாத்தாவின் படத்தைப் பார்த்து கைகளை உயர்த்தி அழைத்தான்.
இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.