இப்போதெல்லாம் ஆண்களும் சரி பெண்களும் சரி முக அழகிற்கு அதிக கவனம் கொடுத்து வருகின்றனர். ஆனால் எல்லோருக்கும் அது கைகூடுவதில்லை.
இதனால் பலர் மிகுந்த கவலைக்கு ஆளாகின்றனர். அதிக குளிர் மற்றும் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, சுற்றுசூழல் மாசு , புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், முகத்திற்கு அதிக ஒப்பனை போடுவது என்று, முக அழகை சரிவர பாதுகாத்து கொள்ள முடியாமைக்கு பல காரணங்கள் உண்டு.
நாம் முக அழகை பெறுவதற்கு பல்வேறுபடட கிரீம் வகைகளை வாங்கி உபயோகித்து வருகிறோம். இதனால் கூட சில சந்தர்ப்பங்களில் முக அழகை இழக்க நேரிடுகிறது.
எனவே நம் முகத்தை இயற்கையான முறையில் நம் வீட்டில் இருக்கும் சந்தனம் மற்றும் தயிரை கொண்டு எளிதாக அழகு பெறலாம். சந்தனம் பொதுவாக மருத்துவ குணம் கொண்டது. மிகவும் வாசனை மிக்கது. மேலும் அதிக குளிர்ச்சி தரவல்லது.
இதனை நாம் முகத்திற்கு பூசி வந்தால் வறட்சியை இல்லாது செய்கிறது. முகத்திற்கு ஈரப்பதனை அளிக்கிறது. வறட்சியின் காரணமாக முகத்தில் ஏற்படும் அரிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. சருமத்தின் சுருக்கங்களை இறுக்கமாக்கின்றது.
முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சந்தன பொடி அழிக்கும் வல்லமை கொண்டது. மேலும் புத்துணர்வையும், சருமத்தினை குழந்தையின் தோல் போன்று மென்மையாக்கும் ஆற்றலும் கொண்டது.
சந்தனத்துடன் ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இம் மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அப்படியே அதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு பூசி ஒரு மணித்தியாலம் வரை அப்படியே வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இதனை வாரத்தில் மூன்று முறையேனும் செய்து வர முகம் வசீகரமாக மாறிவரும். அதேபோல் சந்தன பொடியை மஞ்சள் தூள் , ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து சருமத்தில் பூசி ஊறவைத்து கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்து வர முகமானது அழகுடனும், பொலிவுடனும் மாறிவரும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி முக அழகை பேணுவோம்.