அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கோண்டாவில் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும் என குறித்த மாணவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இன்று காலை 7.45 அளவில் காங்கேசன்துறையிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தின் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் யாழ்ப்பாணம் - கொக்குவில் பாடசாலையொன்றில் கல்வி பயில்பவர் என ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தொடருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசியல் கைதிகளுக்காக தமது உயிரை மாய்த்து கொண்ட மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு பேரணி ஒன்றையும், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.