ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளிலும் இடம்பெறும் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசுகள் வழங்கப்படுவது தெரிந்ததே. இந்த ஆண்டும் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுகிறது.ஸ்வீடன் தலைநகர் "ஸ்டாக்ஹோம்" இல் வைத்து இந்த நோபல் பரிசை நோபல் பரிசுக்குழு இன்று அறிவித்தது.
மனிதனின் மூளை செல்கள் தொடர்பான கண்டுபிடிப்புக்காகவே இந்தப்பரிசு வழங்கப்படுகின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி ஜோன் ஓ கீஃப், மற்றும் நோர்வே நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகளான எட்வர்ட் ஐ மோசர்,அவரது மனைவி மே பிரிட் மோசர் ஆகிய மூவருக்குமே இந்த மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படுகின்றது.
இந்த, மருத்துவத்துறைக்கான நோபல் பரிசுக்குரிய 1.1 மில்லியன் அமெரிக்கடொலர் பரிசுத்தொகையில் பாதி தொகை நோர்வே நாட்டின் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படவிருக்கும் நிலையில்,மறுபாதி தனியொருவர் ஜோன் ஓ கீஃபுக்கு கிடைக்கவிருக்கிறது.
இதேவேளை,எம்மைச் சுற்றியுள்ள இடத்தின் வரைபடத்தை மூளை உருவாக்குகின்ற விதம் மற்றும் ஆபத்தான,சிக்கலான சூழ்நிலையில் மூளை அதற்கேற்ப எம்மை எப்படி வழிநடத்தி செல்கிறது? போன்ற மூளை சம்பந்தமான பல விடயங்களை தெரிந்துகொள்வதற்கு இவர்களின் கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் என்று நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.