1,780 Views
அங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மண்ணில் புதையுண்டுள்ளதால் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை குறித்த அச்சம் எழுந்துள்ளது.
தென் சீனாவில் ஹாங்காங் நகரின் எல்லையோரமுள்ள குவாங்டாங் மாகாணத்தின் ஷென்ஸேன் நகர தொழிற் பூங்காவில் நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. தொழிற் பூங்காவில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுமானங்களுக்காக தோண்டப்பட்ட மண் மலைபோல் குவிந்து இருந்ததாகவும் நிலச்சரிவின்போது கட்டிட இடிபாடுகளின் மேல் மண் குவியல் சரிந்ததில் அங்கிருந்த 33 கட்டிடங்களை மூடிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
நிலச்சரிவின்போது இயற்கை எரிவாயு பைப் வெடித்து வாயு வெளியேறியதால் தீ விபத்தும் ஏற்பட்டது. உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டு மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.
சுமார் 60 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் இருந்த கட்டிடங்கள் நிலச்சரிவால் புதைந்துப் போனது. கட்டிடங்களில் இருந்த 90-க்கும் அதிகமானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900 பேர் தொழிற்பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மீட்பு பணியில் 1,500 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 151 கிரேன்கள் மற்றும் ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பலி எண்ணிக்கை பெரிய அளவில் இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
நிலச்சரிவு குவியல் மிகப் பெரிய அளவில் இருப்பதாகவும் இதனால் மீட்பு பணி மிகவும் சிரமமாக இருப்பதாகவும் சீன பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மிகப் பெரிய பாதிப்பு இருக்கும்போதிலும் தொழிற்பூங்கா அருகே அமைந்திருக்கும் மலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.