தமிழர்களுக்கான ஓர் அடையாளமாக திகழும் கானா பாடல்கள் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழர் வாழும் இடங்களில், குறிப்பாக இந்தியாவில் இளைஞர்கள் தங்களின் இன்பம், துன்பம், நட்பு, காதல் என அனைத்தையும் இந்த கானா பாடல்களில் கூறிவிடுவார்கள். நாட்டுப்புற பாடல்களைப் போன்று இந்த பாடல்களுக்கும் இவர்களின் வாழ்க்கைக்கும் தொடர்பிருந்தது, இன்றும் இருக்கிறது.
இவர்களின் வாழ்வோடு பிண்ணிப்பிணைந்த கானா பாடல்களை மேல்நாட்டு மக்கள், அல்லது மேல் குடியினர் பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால் அது பிழையில்லை. இந்த கானா பாடல்களுக்கு உயிர் கொடுத்து, தமிழ் சினிமாவில் இடம் பெற்றுக்கொடுத்தவர் தான் தேனிசைத் தென்றல் தேவா. இன்றைய பிறந்தநாள் நாயகன்.
இவர் வேலூர் மாவட்டத்திலுள்ள மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். கானா பாடல்களுடன் அதிக ஈடுபாடு கொண்ட தேவா, சினிமாவில் வாய்ப்பு பெற, தன் சகோதரர்களுடன் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். இந்த கானா பாடல்களைப் பாடி காட்டி தான் இசையமைப்பாளராக வாய்ப்பும் பெற்றுக்கொண்டார். இவர் இசையமைத்த முதல் படம் 'மனசுக்கேத்த மகராசா'.
இந்த திரைப்படத்தின் பின் வைகாசி பொறந்தாச்சி, வசந்த கால பறவைகள், நாடோடிக் காதல், அம்மா வந்தாச்சு, போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார். எனினும் சூப்பர் ஸ்டாரின் படமான 'அண்ணாமலை' திரைப்படத்திற்கு இசையமைத்த பிறகு தான் இவரின் புகழ் வானுயர்ந்தது.
அடுத்து வந்த பாட்ஷா ரஜினியின் மிக முக்கியமான படமாக அமைந்ததற்கு தேவாவின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது புகழ்ச்சியில்லை.
அன்றிலிருந்து திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல், அஜித், விஜய் என அனைவரும் விரும்பும் இசையமைப்பாளரானார்.
இவர்களுடன் இணைந்து தேனிசைத் தென்றல் தேவா பணியாற்றிய வாலி, குஷி, முகவரி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், ரெட், தம் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை. இவ்வாறு 100 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்து, இசை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து, விஷேடமாக கானா பாடல்கள் மூலம் இடம் பிடித்து, இசையில் மகிழ்ச்சியை அள்ளித்தரும் தேனிசைத் தென்றல் தேவாவிற்கு சூரியன் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொகுப்பு .
ர. பிரவீனா.